பணிக்கொடை ரூ.20 லட்சம் வரை வரிவிலக்கு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது பணிக்கொடை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதன் மூலம் பணிக்கொடை தொகை யில் வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயரவுள்ளது. வரிவிதிப்புக்கு உட்படாத பணிக்கொடை தொகையை உத்தரவு மூலம் அவ்வப்போது நிர்ணயித்துக் கொள்ள அரசுக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் இந்த மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேறியது. நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடந்த 2 வாரமாக அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பணிக்கொடை சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் எவ்வித விவாதமும் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு மக்களவை கடந்த 15-ம் தேதி ஒப்புதல் அளித்தது. 7-வது ஊதியக் குழு பரிந்துரை அமலுக்கு வந்த பிறகு மத்திய அரசு ஊழியர்களின் பணிக்கொடை தொகை வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக உயர்ந்துள்ளது. இதற்கு சட்டத்திருத்தம் கொண்டுவர ஊழியர் சங்கங்கள் அரசிடம் வலியுறுத்தி வந்தன. பணிக்கொடை சட்டத்தின் கீழ் வரும் அனைத்து ஊழியர்களுக்கும் பணிக்கொடை வரிவிலக்கு உச்சவரம்பை ரூ. 20 லட்சமாக மத்திய அரசு இனி உயர்த்தி அறிவிக்க முடியும். 10 மற்றும் அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் அனைத்து நிறுவனங்களுக் கும் இந்த சட்டத்திருத்தம் பொருந்தும். அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அமைப்பு சார் துறைகளில் பணியாற்றும் 20 லட்சம் ஊழியர்களும் பலன் பெற முடியும்.