கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். நீர்மோர் பந்தல் திறப்பு ஈரோடு மாவட்டம் கோபி பஸ் நிலையம் எதிரில் அ.தி. மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தனியார் பள்ளிகள் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் நிர்ணயிக்க முன்னாள் நீதிபதி தலைமையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிகளின் தகுதிக்கேற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படும். தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 38 லட்சம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். இதில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் பள்ளிகள் கூடுதலாக வசூலித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளிகளில் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.