சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் உடனே நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை-மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 13,331 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரூ7,500; ரூ10,000; ரூ12,000 தொகுப்பூதிய அடிப்படையில் காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்கள்: இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு இந்த நியமனங்களில் முக்கியத்துவம் அளிக்கவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர்களை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், மூத்த பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் குழு தேர்வு செய்யலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.