
கடந்த 3 ஆண்டுகளாவே தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தால் அச்சிடப்பட்டு வழங்கப்படும் நூல்களில் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டு வருவதாக பாடநூல் கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி பாடப்புத்தகங்களில் தலைவர்களின் பெயர்களில் பின்னால் இருந்த சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தல் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களில் முக்கியத் தலைவர்களின் பெயர்களுக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டு, புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளி மாணவர்களுக்கு அண்மையில் தமிழக அரசினால் புதிய பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப் பட்டிருந்தன. அந்தப் புத்தகங்களில் வரலாறு, கவிதைகள், போராட்டங்கள் போன்றவற்றை குறிப்பிடும் பகுதிகளில் தலைவர்களின் பெயர்களோடு இடம்பெற்றிருந்த சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதனப்டி, 12ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில், ‘பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள்’ என்ற தலைப்பில் உள்ள பகுதியில், தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதர் என்று மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. அவருக்கு பின்னால் இருந்த சாதிப் பெயரை (உ.வே. சாமிநாதய்யர் என்பதை) தமிழக அரசு நீக்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள மற்ற நூல்களிலும் சாதி அடையாளங்கள் நீக்கப்பட்டுள்ளன. உ.வே.சாமிநாதரின் ஆசிரியர் பெயரான மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பது மீனாட்சி சுந்தரனார் என்று மாற்றப்பட்டுள்ளது. அதே போல தமிழில் வெளியான முதல் நாவலை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பெயர் மாயூரம் வேதநாயகம் என்று மாற்றப்பட்டுள்ளது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் பெயர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் என்று மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாவே தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தால் அச்சிடப்பட்டு வழங்கப்படும் நூல்களில் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டு வருவதாக பாடநூல் கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1978ஆம் ஆண்டு, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, சாலைகள் மற்றும் தெருக்களுக்கு வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்களுக்குப் பின்னால் இருந்த சாதி பெயர்கள் நீக்கப்பட்டன.
தென்மாவட்டங்களில் 1997ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தை அடுத்து, மாவட்டங்களுக்கு வைக்கப்பட்ட தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அத்துடன், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சூட்டப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்களை நீக்கி, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிடார். இந்நிலையில் தற்போது பாடப்புத்தகங்களில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாரதியார் கூறியது நினைவுகூறத் தக்கது.