
குரூப்-4 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் பல்கலை., வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம் சென்னைப் பல்கலைக்கழகத் தில் நடைபெறவுள்ள குரூப்-4 போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புவோர் பல்கலைக்கழகத்தை நேரில் அணுகலாம். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பல்கலைக்கழகங்களில் போட்டித் தேர்வுகளுக் கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகமும் சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் (பொது) இணைந்து அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முன்ஆயத்த பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்தி வருகின்றன. டிஎன்பிஎஸ்சி குரூப்-4 போட்டித் தேர்வில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மனுதாரர்கள் எளிதில் வெற்றி பெற வசதியாக இந்தப் போட்டித் தேர்வுக்கான முன்ஆயத்த பயிற்சி வகுப்புகள் நடத்தவுள்ளன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இதில் சேர விரும்புவோர் உரிய கல்விச் சான்றுகளுடன் இம்மாதம் 3-வது வாரத்தில் சென்னைப் பல்கலைக்கழக வழிகாட்டும் மைய இயக்குநர் அல்லது சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை அலுவலக நேரங்களில் நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.