பத்திரப்பதிவுத்துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- நிர்வாக நலன் கருதியும், பணியாளர்களின் திறனை மேம்படுத்தும் வகையிலும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொது மாறுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்கள் சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு பணிமாறுதல் கோரினால் அவர்களுக்கு கட்டாயம் பணிமாறுதல் அளிக்கப்பட வேண்டும். அவர்களை நீண்டகாலம் பணிபுரியும் ஊழியர்கள் இடத்தில் நியமனம் செய்ய வேண்டும். ஓராண்டு பணி முடித்தவர்கள் பணிமாறுதல் கோரும் நிலையில் அவர்களின் கோரிக்கை சரியாக இருப்பின் பணிமாறுதல் வழங்கலாம். பணியாளர் அல்லது சார்பதிவாளரின் கோரிக்கையின்பேரில் குறிப்பிட்ட பணியாளரை ஒரு குறிப்பிட்ட சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பரிந்துரைத்தால் எக்காரணம் கொண்டும் நியமிக்கக்கூடாது. சுருக்கெழுத்து தட்டச்சர் பணி இடங்கள் மிகக்குறைவாக உள்ளதால், அவர்களை அதே பணி இடத்தில் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.