5G தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ 5G மொபைலை 2019-20ல் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. 2021ல் அனைவரும் வாங்கும் விலைக்கு 5G மொபைல் கிடைக்கும் என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
தற்போது உலக அளவில் அமெரிக்காவில் தான் 5G தொலைத்தொடர்பு சேவை சிறிய அளவில் பயன்பாட்டில் உள்ளது. இதனை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விரிவாக்கம் செய்ய அந்நாட்டில் திட்டமிடப்பட்டிருக்கிறது. தென்கொரியா, ஜப்பான், சீனா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 5G தொலைத்தொடர்பு வசதியை அறிமுகம் செய்ய ஆயத்தப் பணிகளை மேற்கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் 5G சேவையின் தொடக்கம் தாமதமாகலாம் என்றே கருதப்படுகிறது. இருப்பினும் அடுத்த ஆண்டிலேயே முதல் 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாக வாய்ப்புள்ளது. ஆனால் 2019 அல்லது 2020ல்தான் நாடு முழுவதும் 5G தொலைத்தொடர்புக்கான கட்டமைப்பு வசதிகள் ஓரளவு நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.
5G தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதில் ஆர்வம் காட்டும் தொலைத்தொடர்பு நிறுவனங்களை அதற்கான சோதனை மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ள இந்தியா ஊக்குவித்து வருகிறது. பிஎஸ்என்எல் உட்பட பல நிறுவனங்கள் இதற்கான பணிகளை மேற்கொண்டிருக்கின்றன.
இதனிடையே, ஹவாய் நிறுவனத்தின் முதல் 5G ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு இந்தியாவில் வெளியிடப்படும் என அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜிம் சூ தெரிவித்திருக்கிறார். வீவோ நிறுவனமும் இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் அதற்கான அலைக்கற்றைகளைப் பெற்றுவிட்டால், 5G மொபைலை அறிமுகம் செய்யத் தயாராக இருக்கிறோம் எனக் கூறியுள்ளது.
5G விஷயத்தில் அதிக கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ 5G மொபைல் இந்தியாவில் 2019-20ல் வெளியாகும் எனக் கூறியிருக்கிறது. ஆனால், 2021ல் அனைவரும் வாங்கும் விலையில் 5G மொபைல்கள் கிடைக்கும் என ரிலையன்ஸ் நிறுவனம் கணித்துள்ளது.