தமிழக அரசு பணியாளர் சீரமைப்பு குழுவுக்கான ஆலோசனைகளை ஜூன் 30-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என உறுப்பினர் -செயலர் மு.அ.சித்திக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பணியிடங்களை கண்டறிதல் தமிழக அரசுத் துறைகளின் பணியாளர் அமைப்பை மதிப்பீடு செய்து அவசியமற்ற பணியிடங்களை கண்டறிதல், வெளிமுகமை மூலம் அல்லது ஒப்பந்தப்பணி அடிப்படையிலோ பணியமர்த்தலுக்கு வழிவகையுள்ள பணியிடங்களை கண்டறிதல் மற்றும் அரசுத்துறைகள், அரசு முகமைகளின் நி்ர்வாக செலவு மேலாண்மை குறித்த பிரச்சினைகளை ஆய்வு செய்து அரசுக்கு உரிய பரிந்துரைகள் அளிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான எஸ்.ஆதிசேஷய்யா தலைமையில் பணியாளர் சீரமைப்பு குழு அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு ஆலோசனைகளை பெறத் தொடங்கியுள்ளது. பணியாளர் சீரமைப்புக்குழுவுக்கான ஆலோசனைகளை நேரிலோ அஞ்சல் மூலமாகவோ அல்லது ‘src_2018@tn.gov.in’ என்ற மின்னஞ்சலுக்கோ ஜூன் 30-ம் தேதிக்கு முன் அனுப்பலாம். இக்குழு தொடர்பான விவரங்களை, ‘www.tn.gov.in/src’ என்ற இணையதளத்தில் காணலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.