
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25% ஒதுக்கீட்டில் பள்ளி அட்மிஷனுக்கு 2 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்றோடு கல்வி உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கடைசிநாள் என்பதால் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையதளம் வாயிலாக தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் RTE 25% கட்டணமில்லா அட்மிஷன்..
தமிழ்நாடு முழுவதும் உள்ள 8000 தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் 25% இடஒதுக்கீடு அடிப்படையில் 83 ஆயிரத்து 378 இடங்கள் உள்ளன. கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009இன் படி, சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் எல்கேஜி வகுப்பு துவங்கி உயர்நிலை வகுப்புகள் வரை 25% இடஒதுக்கீட்டில் இலவசமாக கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான 2023-2024ம் கல்வியாண்டிற்கான விண்ணப்பதிவு ஏப்ரல் 20ஆம் தேதி துவங்கி இன்று (மே மாதம் 18ம் தேதி) வரை rte.tnschool.gov.in என்ற இணையதளம் மூலம் நடைபெற்று வருகிறது.
RTE 2023
இந்நிலையில் இந்த 25 சதவீத இட ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 2023-2024ம் கல்வியாண்டில் அட்மிஷன் பெறுவதற்கு இதுவரை 2 லட்சத்து 99 ஆயிரத்து 688 பேர் பதிவு செய்துள்ளனர். ஆனால், பலரும் இருமுறை ஒரே மாணவரக்கு விண்ணப்பித்துள்ளதால் இந்த எண்ணிக்கை வந்துள்ளதாகவும் உண்மையான எண்ணியாகி 1 லட்சத்து 32 ஆயிரம் 872 விண்ணப்பங்கள் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
RTE 2023 விண்ணப்பதிவு முடிவு!
இன்று விண்ணப்ப பதிவு முடிந்த பிறகு விண்ணப்பங்கள் வடிகட்டப்பட்டு தகுதியான விண்ணப்பங்கள் சார்ந்த விபரங்களும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருப்பின் அதற்கான காரணங்கள் இணையதளத்திலும் சம்பந்தப்பட்ட பள்ளியிலும் மே மாதம் 21ஆம் தேதி அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
RTE 2023 அட்மிஷன் தேதி..
ஒதுக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் மே மாதம் 23ஆம் தேதி அன்று குலுக்கல் நடத்தப்பட்டு சேர்க்கைக்கான குழந்தைகள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்ட குழந்தையின் பெயர், பட்டியல் விண்ணப்பத்துடன் 24ஆம் தேதி அன்று இணையதளத்திலும் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பள்ளிகளிலும் வெளியிடப்படும். இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை மே மாதம் 29ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.