மாணவர்கள், பெற்றோர்களின் கல்வி குறித்த சந்தேகங்களை போக்கும் உதவி மையம் சென்னையில் அமைக்கப்படுகிறது | மாணவர்கள், பெற்றோர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த சந்தேகங்களை போக்கவும், ஆலோசனை வழங்கவும் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இலவச தொலைபேசி எண் வசதியுடன் உதவி மையம் அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மாணவர்கள்-மாணவிகள், பெற்றோர்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இதர துறைகள் குறித்த தேவையான தகவல்கள், தெளிவுரைகள், ஆலோசனைகள் ஆகியவற்றை பெறுவதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண் (14417) வழியாக தொடர்பு கொள்ளும் வழிகாட்டி உதவி மையம் அமைக்கப்படுகிறது. இந்த மையம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. மையத்தின் பயன்பாடுகள் வருமாறு:- போட்டித்தேர்வு * இந்தமையம் மூலம் கலை, இலக்கியம், பண்பாடு, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் வணிகம், மற்றும் வேலைவாய்ப்பு போன்ற துறைகள் குறித்த தகவல்களையும் ஆலோசனைகளையும் வழங்குதல். * மாநில அளவிலும், தேசிய அளவிலும் உயர் கல்விக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் பங்கேற்பதற்கான வழிகாட்டுதல்களை தெரிவிப்பது. * மாணவர்களுக்கு தேவையான உளவியல் ஆலோசனைகளை வழங்குதல். * கற்றல் குறைபாடுள்ள மாணவர்களின் திறனை மேம்படுத்த வழிகாட்டுதல். திட்டங்கள் * அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களால் அறிவிக்கப்படும் திட்டங்களையும் பயன்களையும் மாணவர்களுக்கு தெரியப்படுத்துதல். * பாடத்திட்டம் குறித்த தகவல்களையும் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைகளையும் தெரியப்படுத்துதல். * உடல் நலம், பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை தெரிவித்தல். * மாணவர்களின் திறன் மேம்பாடு, முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டமிடலுக்கு தேவையான பயிற்சி நடத்த கையேடுகள் வழங்குதல். இந்த தகவலை டி.பி.ஐ. வளாக கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.