
உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி என்றும், தாய் மொழியில் பயின்றால்தான் அறிவு வளரும் என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
முன்னதாக, திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம் கிராமியப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியார், ஜான்சி ராணி, மருது சகோதரர்கள், ராணி மங்கம்மாள், வீரபாண்டிய கட்டபொம்மன் உட்பட 40 தமிழக சுதந்திரப் போராட்ட தலைவர்களின் புகைப்படக் கண்காட்சி மற்றும் சுதந்திரப் போராட்டம் தொடர்பான ஒலி-ஒளிக் காட்சியை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர், நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், 2000 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் ஆண்டபோது, கட்டடக்கலைப் படிப்பு இல்லை. எனினும், சிறந்த ஆளுமை, படைப்புத் திறன் காரணமாக அவர்கள் பல கட்டடங்கள் மற்றும் கோவில்களை உருவாக்கியதாக தெரிவித்தார். தாய்மொழிக் கல்விதான் அதிக பலன் தரும் என்று கூறிய அவர், பிரதமரின் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை தொடங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
பின்னர் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன், தென்தமிழகத்தைத் தவிர்த்து சுதந்திரப் போராட்ட வரலாற்றை எழுத முடியாது என்றார். தமிழகத்தில்தான் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திடப்பட்டது என்று கூறிய அவர், இதில் திருநெல்வேலி, முக்கிய பங்கு வகித்ததாகத் தெரிவித்தார். மகாகவி பாரதியார் வழியில், பிரதமர் செயல்பட்டு வருவதாகக் கூறிய அவர், பெண்களின் சக்தி நாட்டின் சக்தி, பெண்களின் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம் என்ற அடிப்படையில் பிரதமர் செயல்பட்டு வருவதாகக் கூறினார். 2047ஆம் ஆண்டு 100-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது நாடு வளர்ச்சி அடைந்தாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.