இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் ஆதார் எண்ணை பகிர வேண்டாம் என, அதனை வழங்கும் அமைப்பான யுஐடிஏஐ கூறியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்: ஆதார் எண்ணை இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு மற்றவர்களுக்கு சவால் விடுப்பதை தவிர்க்க வேண்டும். இது போன்ற செயல்களை ஏற்று கொள்ள முடியாது. இதனை தவிர்ப்பது நல்லது. இத்தகைய செயல்களை செய்ய சட்டத்தில் இடமில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிராய் தலைவர் சர்மா, சமூக வலைதளத்தில் தனது ஆதார் எண்ணை வெளியிட்டு, தனது தகவல்களை வெளியிட முடியுமா என சவால்விடுத்தார். இதன் பின்னர் சில மணி நேரங்களில், சர்மாவின் ஆதார் எண்ணைக் கொண்டு அவரின் மொபைல் எண், மாற்று மொபைல் எண், முகவரி, இமெயில் முகவரி, பிறந்த தேதி, பான் எண், பிறந்த மாநிலம், தற்போது வசிக்கும் வீட்டின் முகவரி உள்ளிட்ட தகவல்களை , ஆன்டர்சன் என்ற ஹேக்கர் வெளியிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.