
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் நாளை பல்வேறு பல்கலைகழகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் புயல் முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புயலை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
மேலும் சென்னை , திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் தலைமை செயலாளர் இறையன்பின் அறிவுறத்தலை தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும் கனமழை எச்சரிக்கை மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளித்து கல்வி துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைகழக தேர்வுகள் அனைத்தும் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு தேதியில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடத்தப்படும் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
இதேப்போன்று திருவள்ளுவர் பல்கலைகழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம், சென்னை பல்கலைகழகம், உள்ளிட்ட பல்கலைகழங்கள் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளன.
மேலும் நாளை நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு டிசம்பர் 16-ம் தேதி நடைபெறும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதேபோல் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பருவத்தேர்வுகள் நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் நாளை நடைபெறவிருந்த 5ஆண்டு சட்டப் படிப்பு மற்றும் மூன்றாண்டு சட்டப் படிப்பு பாடங்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைத்து அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.