9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ரூ.468 கோடி செலவில் இணையதள வசதியுடன் கணினி கல்வியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- அரசு பள்ளியில் சேர்க்க… கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு உள்பட்ட 12 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் மூலமாக ‘ஸ்மார்ட்’ வகுப்புகள் தொடங்கப்படும். அதுதவிர, தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். எந்த பெற்றோரிடமும் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க கட்டாயப்படுத்த கூடாது. அவர்களே அக்கறை எடுத்து அரசு பள்ளியில் சேர்க்கவேண்டும். அவ்வாறு செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு லட்சம் மாணவர்கள் அதிகமாக சேர்க்கப்படுவார்கள் என்ற புள்ளி விவரம் வந்துள்ளது. ரூ.468 கோடி செலவில்.. யாருக்கும் தனிப்பட்ட முறையில் சிறப்பு திட்டங்கள் கிடையாது. மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தற்போது மடிக்கணினி, பென்சில், பேனா, ரப்பர் உள்ளிட்ட 14 பொருட்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் ரூ.468 கோடி செலவில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இணையதள வசதியுடன் கணினி கல்வியை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.