
மழைநாள் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் வரும் ஜனவரி மாதம் 16,17,18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பன்னாட்டு புத்தக கண்காட்சிக்கான இலச்சினையை (முத்திரையை) மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்த பன்னாட்டு புத்தக கண்காட்சி மூலம் தமிழர்களின் கலை படைப்புகள் உலகளவில் செல்வாக்கு பெறும் நிலை உருவாகும் என்று தெரிவித்தார்.
மேலும், பள்ளி விடுமுறை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ” கடந்த ஆண்டுகளைப் போல் இந்த கல்வியாண்டில் பாடத்திட்டம் குறைக்கப்பட வில்லை. பாடங்களை முழுமையாக நடத்த வேண்டிய கடமை உள்ளது. முன்னதாக, தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 19ம் தேதி வரும் சனிக்கிழமை வார விடுமுறைக்கு பதிலாக பணி நாளாக நடைபெறும் என்று தெரிவித்தார்.
அதேபோன்று, மாநிலத்தின் பெய்த தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். இந்த மழைநாள் விடுமுறை நாட்களை ஈடு செய்ய தேவை ஏற்பட்டால் நிச்சயமாக பரிசீலக்கப்படும். சனிக்கிழமை வார விடுமுறை நாட்கள் பணி நாளாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.