புதிய பாடத்திட்டத்தில் பிளஸ்-1 பாடப்புத்தகங்கள் 91 சதவீதம் அச்சடிக்கப்பட்டுவிட்டதாக பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். பிளஸ்-1 பாடப்புத்தகம் தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. 11-வது வகுப்புக்கு மட்டும் புதிய புத்தகங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் இன்னும் கிடைக்கவில்லை. குறிப்பாக சென்னை மாவட்டத்தில் பிளஸ்-1 விலை இல்லா புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதற்கு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கண்டனம் தெரிவித்ததுடன், புத்தகங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. 91 சதவீதம் அச்சடிப்பு இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குனர் ஜெகன்நாதன் கூறியதாவது:- புதிய பாடத்திட்டத்தில் தயாரிக்கப்பட்ட 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு 1 கோடியே 2 லட்சத்து 83 ஆயிரம் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் தவிர மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறந்த அன்றே (ஜூன் 1-ந் தேதி) புத்தகங்கள் வழங்கப்பட்டது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில புத்தகம் கடந்த ஏப்ரல் மாதமே அச்சடிக்கப்பட்டு குடோன்களுக்கு அனுப்பப்பட்டது. மற்ற புத்தகங்கள் அச்சடித்த உடன் அனுப்பிவைக்கப்பட்டது. கடைசியாக கடந்த 14-ந் தேதி அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. 91 சதவீதம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் அனுப்பிவைக்கப்பட்டன. எஞ்சிய 9 சதவீத புத்தகங்கள் மட்டும் அச்சடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் நேற்று தான் பள்ளிகளுக்கு 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் வந்து இறங்கின. அவை உடனுக்குடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது.